நீ

கூர்வாள் கொண்ட வன்மையும் நீ;
நறுமலர்
கொண்ட மென்மையும் நீ;

மாமலை
கொண்ட மோனம் நீ;
கோகிலம்
பாடும் கானம் நீ;

வெங்கதிர்
பரப்பும் ஒளியும் நீ;
அந்தகாரம்
கொடுக்கும் இருளும் நீ;

பாலை
வனம் கொண்ட வெறுமையும் நீ;
சோலை
வனம் கொண்ட முழுமையும் நீ;

தோளோடு
சாய்கையில் தோழியும் நீ;
தினவோடு
பாய்கையில் எதிரியும் நீ;

சகலமும்
கற்றுணர்ந்த  ஆசானும் நீ;
தேடாப்
பொருளைத் தேடும் சீடனும் நீ;

காதல்
புரிகையில் மனைவியும் நீ;
கருணை
சொரிகையில் அன்னையும் நீ;

கண்ணோடு
பார்த்தால் நீயும் நீ;
என்னோடு
பார்த்தால் நானும் நீ;

காண்பொருள்
யாவிலும் இருப்பதும் நீ;
யாவிலும்
நீயிருப்பதால் உலகமும் நீ;